" மகள் இருந்த வீடு"தலைப்பு நம்எல்லார் வீடுகளிலும் இருந்துவிட்டு வாழ்க்கைப்பட்ட இடத்திற்கு புறப்பட்டுப்போன மகள்களை நொடிக்குள் கொண்டுவந்து நெஞ்சில் வைக்கும்.
சூடேறியதைப்பார்க்க தோசைக்கல்லில் தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளில் எஞ்சியவற்றை துடைத்துத்தள்ளும் துடைப்பம்தான் நிகழ்கால வாழ்க்கை நியதி. மகள்களை மறக்கடிக்கின்றனவா இன்றைய நாட்கள்? நினைவிலும்,கனவிலும், பேச்சிலும் நம்மகள்கள் நம்மகள்களாகவே இருந்துவிடுவார்களா?
எழுத்தின் வழியே சமூகத்தின் மனதை உருக்கி வார்க்கும் கவிஞரின் படைப்புகளுள் ஒன்று "மகள் இருந்தவீடு" பல மாத,வார, நாள்,இலக்கிய இதழ்களில் அடையாளமாகிவிட்ட பெயர் கவிஞர் ஜெய பாஸ்கரன்.
நாடுவிட்டும் ஊர்விட்டும் ஒருவழியாக தஞ்சைக்கு வந்தபின் சில நற்சிநேகர்கள் கிடைத்தனர். அமெரிக்க டெரன்டோவில் இருந்துகொண்டு தொழிற்கல்வி படித்து பெற்ற பணியிலும் தமிழ்க்கவிதை படைப்பில் பெயர்பதிக்கும் திருமதி மருதயாழினியின் தந்தை திரு தனபால் அவர்கள் ஒரு நற்சிநேகர். மகள் படைப்புகளில் சொக்கி பீடும் பெருமையும் கொண்டு பரவசமாக என்னிடம் பகிரும் ஒரு அப்பா!
அவர் அடிக்கடி ஜெயபாஸ்கரன் பெயரைக்குறிப்பிடும்போதெல்லாம் அவர் யாரென விசாரிக்கவில்லை. அதைச்செய்ய வைத்தது இப்போது ஒரு மகளின் அப்பா எனக்களித்த இந்தப் புத்தகம் "மகள் இருந்தவீடு".
தொட்டேன், திறந்தேன், வாசித்தேன், எழுதுகிறேன். வலைப்பூக்களில் அவரை எழுதிய பக்கங்களில் ஒரு சுற்றும் வந்தபின் கொஞ்சம் தன்னடக்கமாகிவிட்டேன். ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன்.
நம்மை அநாதையாக்கி படிப்படியாக மறைந்துவரும் அம்மியும் குழவியும் பற்றிய நெஞ்சில் கரையும் கவிதையை வலைப்பூவில் படித்ததும் அப்படியே நெஞ்சில் எடைகூடிவிட்டது. நெசாங்கூட்டில் உட்கார்ந்துகொண்டன அம்மியும் குழவியும்:
"அம்மாவும் குழந்தையும் போல
இன்றும் எனது கிராமத்தில்
உயர்ந்து இயங்குகின்றன
அம்மிகளும் குழவிகளும்"
"இல்லாமைகளையும்
இயலாமைகளையும்
என் அப்பாவிடம் சொல்வதை விட
அம்மியிடம் சொல்லி அரைப்பதுதான்
ஆறுதலாக இருந்தது
என் அம்மாவுக்கு.
புரிகிறது அம்மாவின் பல சுமைகள் அம்மியில் அரைபடுவது அறிய கொஞ்சமாவது ஆறுதல். காலம் அம்மா மேல் கொடுக்கும் சுமை எதனால் என்று கவிஞர் மேலும் வாசிக்கவைக்கிறார்.
இந்த அருமை நூலின் 167 பக்கங்களில் முதல் 128 பக்கங்கள் கனமானவை. மகள் கொண்டவை 39 பக்கங்கள். 128 பக்கங்க்களில் ஒருசமூகத்தின் விமர்சனப்பார்வை என்பது இலக்கியோனா என்ற புலமைக்காய்ச்சல் நோய், நுகர்வுக் கலாச்சார நுகத்தடியின் பாரம், கமுக்கங்களைக் கடத்துகிறவர்கள், நிலவும் ஒரு ஆய்தக் கிடங்காகிவிடுமோ என்ற அச்சம், ஒரே ஒரு ஆங்கிலச் சொல்லைப்பேசி சொக்கித்திரியும் மயங்கிகள் என பல வற்றிலும் படிம அழகும்,மரபின் சாயலில் தொடைகள் கூடிய படைப்பை அங்கதம் எள்ளல்களில் உணரவைக்கும் கலை வியப்பைத் தருகிறது.
அதிகப்பக்கங்களின் எடைக்கு நிகரான மனதை உருக்கும் மகள் இருந்தவீடு. வீட்டைப்பிரிந்து வாழும் யாரும் எப்படிகரைந்து கசிவான் என்பது அடியேன் அயலகத்தில் பதினைந்து ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த அனுபவம். அப்போதெல்லாம் அடிக்கடி நினைப்பேன் திருமணமாகி கணவன் வீட்டில் வாழும் பெண்ணின் மனநிலையும் இப்படித்தானே என்று.அதன் அடித்தளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் மகள் வாழ்க்கைப்பட்டுப் போனபின் ஏற்பட்ட சொல்லமுடியாத வாட்டம் பற்றிக்கொண்டது. இந்த மகள் இருந்தவீடு ஒவ்வொரு அப்பாவின் வீடும்தான்
ஒவ்வொரு தலைப்பையும் தாண்டுவதற்குள் முட்டிய கண்ணீர் முழுவதும் கொட்டிவிடும்.
மகளை ஒருவனிடம் பிடித்துக்கொடுத்தால்தான்,கட்டிக் கொடுத்தால்தான் நிம்மதி என்பது எவ்வளவு அருவருப்பாகிவிட்டது.
* 'மாமியார் வீட்டிலிருந்து
இப்ப எங்க அம்மா வீட்டுக்கு
வந்திருக்கேன்'
என்று யாரிடமோ
சொல்லிக்கொண்டிருக்கிறாய்
உனக்கென்று
ஒரு வீடற்றவளாக!
* மகள் தின்று புதைத்த மாங்கொட்டை முளைத்தது. அதை லாவகமாகப் பிடுங்கி வேறிடத்தில் நட்ட கவிஞருக்கு கைகள் நடுங்கின. எழுதுகிறார்,
பெரும் பொருட் செலவில்
இருநூறு கிலோமீட்டருக்கு அப்பால்
நாங்கள் உன்னை நட்டது
புதிய குழியிலா?
புதை குழியிலா?
* மகள் கல்வியில்,கலைகளில், வாழ்க்கையில் சாதிக்கக் கண்ட கனவுகள்ஆயிரம்.
"இருந்தும்
உனது அத்தனைக் கனவுகளும்
தோற்றுப்போயின
உனக்குக் கல்யாணம்
முடிக்க வேண்டுமென்கிற
எங்கள் ஒற்றைக் கனவிடம்!
* வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது தன் காலணிகளைக் கழற்றுவாள். இன்னொரு ஜோடி இல்லாததை கவனித்துவிட்டு..
"உனது காலணிகளைக்
கழற்றிக் கொண்டே
என்னுடையதைத் தேடுவாய்
அப்பா எங்கேம்மா?
என்று அடிக்கடி கேட்பது
அணிச்சையாகி இருந்ததுஉனக்கு"
ஜெயபாஸ்கரன் நானாகத்தான் இருந்திருக்கிறார். இல்லாவிட்டால் எப்படி என் மகள் இருந்த வீட்டை இப்படி நெகிழ வரைந்திருப்பார். கவிதை பொது மனித உணர்வின் வார்ப்பாகும்போது அது எல்லார் மனத்திலும், எல்லாமொழிகளுக்குள்ளும் குடிபுகுந்துவிடும்.
இந்நூலின் முதல் கவிதை பெண் குழந்தை பிறப்பைத் தடுக்க, கருவிலேயே கண்டு பதைத்ததும், அதைக் கொன்றதும், கள்ளிப்பால் கரந்து காத்திருந்ததும், நெல்மணியை புகுத்தி மூச்சை நிற்கவைத்ததும்,பருவம் வந்த மறுநாளே பாடப்புத்தகத்தைப் பறித்ததும் சொல்லமுடியாத வலிகளைத் தந்தது சமுதாயம். அது செத்து ஆண்டுகள் ஒடிவிட்டன,
"அன்புத் தாயே
அறிவின் தெளிவே
ஆயிரம் ஆண்டுகள்
அடங்கிக் கிடந்து
அடி வயிற்றில் நீ
அன்று பதுக்கிய
பெரு நெருப்பெல்லாம்
பெண்களாய்ப் பிறந்தன.
...........
அறிவீனர்களின்
ஆதிக்கத்திமிரை
அறிவுப்பெண்கள்
அடித்துத் தகர்த்தனர்."
அப்பாவுடன் இருந்த வீட்டின் மகள் அறையில் எந்தப் பொருளையும் எடுத்துப் போட்டு விடாதீர்கள், நோட்டுப்புத்தகங்களை கிழித்து வீசிவிடாதீர்கள். அதன் பக்கங்களில் அப்பாவும் அம்மாவும் இருப்பார்கள். கட்டுமானத்தின் போது அண்ணன் அறைக்கு எதிரே அவள் அறை எதனாலோ குறைந்திருந்தது. " "ஏன்ப்பா எனக்கு மட்டும் சின்ன அறை?" என்று கேட்டதில் விழுந்த அரை சுவரை இடித்து பெரிதாக்கிக் கொடுத்த பின்னும் என் குற்ற உணர்ச்சி போகவில்லை. மகள் இருந்த வீடு மீண்டும் கண்ணீரை நிரப்புகிறது.
வடிவ மாற்றம் கலந்து வருவதை விட. சில மரபுச்சாயல் கவிதைகளை தனி நூலாக்கினால் சிறப்பாக இருக்கும்.
ப.திருநாவுக்கரசு
27/12/24




.jpeg)



.jpg)