Friday, 24 April 2026

முடிவிலும்.


 










முடிவிலும் ஒரு காயம்!


அது 

நான் என்றோ

பழம் தின்று நட்ட விதையும்

அதன் ருசியும்

அதை உயரத்தில் வைக்கச்சொன்னது.

 மேல் மாடியில்

செடிவளர் பையில்

குடிநீர் ஊற்றி காத்துவந்தேன்.

 

காலையில் இருவரும்

ஒருவர் ஒருவர்முகத்தில்

விழிப்போம்

அது ஒரு புத்துணர்வுப் பரிமறுதல்.

 

நம்பிவந்த நாற்றை

கைவிடாமல் காக்கும் கடமையில்

கண்ணும் கருத்துமாய் பார்த்தும்

நீர்விட மறந்தால் அது

உடல்மொழியால் வாட்டம் காட்டும்

மன்னிப்புடன் ஒரு குவளை ஊற்றுவேன்.

 

இடைவெளி கூடிப்போய்

ஒருநாள் பதறி ஓடிப் பார்த்தபோது

சாவதற்கு முன்னால்

ஒருமுறை பார்க்க நின்றதாக

பார்த்ததும் பதறிவிட்டேன்.

 

வெயிலின் உக்கிரத்தில் அந்த

பச்சை உதிரம் தீர்ந்து கொண்டிருந்தது.

உயிர்நீர் ஊற்றிக் காத்திருக்கிறேன்

நீ பிழைத்துவிடு

என்னுள் மீண்டும் தழைத்துவா!

 

உன்னை கவனிக்காமல் போன தவறை

சிலபொத்தல் காரணங்களால்

தைக்கப் பார்க்கிறேன்.

 

ஆம்...என் நேரம்

பத்துபேருக்கான சமையலில்

ஐந்தாறு பொது நிகழ்வுகளில்

இரண்டொரு மணநிகழ்வில்

ஒருசில பிணநிகழ்வுகளில்

விருந்துகளில்

கைபேசி பாசாங்கு பேச்சில்

போய்க்கொண்டே இருக்கிறது..

 

உன் கடைசி ஆசைக்காக

என்னைப்பார்த்துவிட்டு

கண்களை மூடும் முன்

நான்முடிந்துவிடுகிறேன்.

நம்முடன் பெரும் சுற்றம் இருக்கலாம்

ஆனாலும் ....முடிந்துபோவோம்

 

உனக்குவந்தது நீர் வறட்சி

எனக்குவந்தது காலவறட்சி

நம் அருகில்தான் தண்ணீர் தொட்டிகூட....


-ப.திருநாவுக்கரசு

 

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...