Friday, 19 December 2025

நன்றறிவோம்..

 

நலம் தரும் சொல்-முகநூலில் படித்ததை நன்றியுடன் பகிர்கிறேன்



முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது.

"இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... 

நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். 


நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . 

இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .

நான் இறந்து விட்டால்... 

என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.

எனவே 

எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். 

அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.


வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் 

மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.


என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்... 

தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்." 

இப்படிக்கு மீனாள் ராமசாமி. 

என்று எழுதி இருந்தது.


சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர். 

தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 


'யார் இந்த மீனாள் ராமசாமி? ' 

என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது. 

'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார். 

ஆனால், வேலைப் பளு காரணமாக

முடியவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை... 

'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். 


அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

சின்ன கட்டிடம்... 

வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது. 

பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது. 


எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். 


"நீங்கள் தானே மீனாள் ராமசாமி?” 

என்று கேட்டார். 

“ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார்.

விவரங்களைச் சொன்னார்.

“அப்படியா தம்பி 

ரொம்ப சந்தோஷம்... 

உட்காருங்க. 

ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” 

என்று இருக்கையைக் காண்பித்தார்.


“ஒன்றும் வேண்டாம் 

தண்ணீர் மட்டும் கொடுங்கள்”

தண்ணீர் கொடுத்தபடியே, 

“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்...

ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .

பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். 


எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.

கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள். 

நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம். 


எங்களுக்கு குழந்தைகள் இல்லை...


எனவே, அதிகம் செலவுகள் இல்லை. 

அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.

வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்... 

அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார். 

எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” 

என்று விபரமாகச் சொல்லி

 முடித்தார்.


இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.

“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.


“சரிங்க ஐயா,

உங்களைப் பார்க்க வந்தேன். 

வேறு விஷயம் இல்லை...

கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர்.

சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .

அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும்

“நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் "

என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.


ஆச்சரியம் என்னவென்றால், அங்கு 

கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை. 

வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்

கொண்டார்கள். 

பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை. 

இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.


“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே? 

யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “

என்று கேட்டார் மானேஜர்.

“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. 

காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”

“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்” 

என்று சொன்னார். 


மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார். 

மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார். 

மாதங்கள் போனது.


கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை. 

'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை.

காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.

மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். 


எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். 


அதே கல்லாப்பெட்டி . 

எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள். 

சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்... 

மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.


உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள். 

மேனேஜருக்கு புரிந்து விட்டது.

விசாரித்ததில்... 

அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். 

அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம். 

இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.


“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

“தெரியும் “என்று சொன்னார்.

“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார். 


“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது. 

எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.

அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். 

அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். 


அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும்.

என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 

இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.


“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” 

என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள்.

இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது...


*இந்த உலகம் எப்படி பட்டது * என்று... 

எதையும் பெறுவதை விட... 

*கொடுப்பதில் தான்... * 

*ஆனந்தம்,*

*அமைதி,*

*திருப்தி* 

*நிம்மதி* உள்ளது. 

இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான்.

-------------------------------

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

(அறன் வலியுறுத்தல் குறள் எண்:36)


பொழிப்பு (மு வரதராசன்): 

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

7 comments:

  1. மிக நெகிழ்ச்சியான பதிவு. மனிதநேயம், அறம், நம்பிக்கை ஆகியவற்றை எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறது. வாசித்த பிறகும் மனதில் நீடிக்கிறது. அருமை!

    ReplyDelete
  2. நல்லதைச் செய்வதே உண்மையான வாழ்வு.

    ReplyDelete
  3. மனம் கலங்கிப் போய்விட்டது

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு பெரியப்பா.. இச்சிறுகதை நெஞ்சைக் கவர்ந்து விட்டது 👌🙏

    ReplyDelete
  5. மெய் சிலிர்த்தது.கண்களை குளமாக்கிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பதிவு. உலகில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. அந்த முதியவர் கூறிய வார்த்தைகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  7. நன் மக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள் நன்றி

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...