Thursday, 30 October 2025


 

கண்டறியாதன… … 


பிரும்மாண்ட

பொதுக்கூட்டம் 

கலைந்தது திடலில். 


குப்பைகள் அகற்றிய

என்தோழன்

கண்டறியாதன கண்டான். 


தலைவனுக்கு மூச்சுத்தினறக்

குளிப்பாட்டிய சோப்புக்கட்டிகள்

சிதறிக் கிடந்தன. 


அடுக்கு மொழிகளும் வாழ்த்துகளும்

மிதிபட்டுச்சிதறி

குற்றுயிராய்க் கிடந்தன. 


எதிரியை வசைபாடி

தங்கள் தலையில் துப்பிக்கொண்ட

எச்சில் ஈரம்பட்டுக் கிடந்தது பூமி. 


தாக சாந்தி தந்துவிட்டு

உடைத்துக் கொண்ட

மதுப்புட்டில்கள் குத்திக் கிழித்த

குருதியில் குந்த அடித்துக்கொண்டன

ஈக்கள். 


மாநகர ஏமாளிகள்

சூட்டிய மலர்மகுடம்

மண்ணில் குப்புறக்கிடந்து. 


கடலைப்பொட்டலக்

காகிதக்குப்பையுடன்

கண்ணீர் மகஜர்கள்

கசங்கிக்கிடந்தன. 


தின்ன இரைதேடி

திடலுக்குவந்த

நாயும் குட்டியும்

தலையிலடித்துக்கொண்டு

திரும்பிச்சென்றன. 


காரணம் தெரியாமல்

கழன்ற காலணிகள்

போக மனமில்லாமல்

மயங்கிக் கிடந்தன. 

ஃஃஃஃஃ

ப. திருநாவுக்கரசு


Thursday, 23 October 2025

பூஞ்சை


பூஞ்சை
**********
வகை வகையாய்
பூஞ்சைகளின்
பெருக்கம். 

பயிர்களைத் தொற்றி
பண்டங்களைக் கெடுத்து
வாசம் செய்கின்றன
நம்மிடமும்! 

கல்லான நட்பும்
நயவஞ்சகப்
பூஞ்சை உளியால்
சிதறிப் போனது! 

காதலியை
'உயிரே' என்ற
நாளான வார்த்தை
பூஞ்சையாகி
பொட்டை அழித்தது! 


வெற்றிக்கு 
மாலை போட்டு
தோல்வியில் விலக்கும்
கண்கெட்ட கட்சிப் பூஞ்சை! 

அமுதத் 
தமிழ்ச் சொற்களில்
அறிவுகெட்ட பூஞ்சைகள் 
'அப்பாடக்கர்கள்'
'வச்சுசெய்வதால்'
பாதாளச் சாக்கடையில் பந்திவிரிக்கின்றன! 

குடும்ப ஈரத்தில்
வளர்ந்த பூஞ்சை
நேசம்திரித்து
பேச்சை அழித்து
முகத்தில் விழிக்காது
முறித்துப் போட்டது! 

ஆயிரம்காலப்
பயிர்முடிச்சை
அரைமணிக்குள்
அவிழ்த்து எறிகிறது
மணவிலக்கு எனும்
மானம் கெட்ட பூஞ்சை! 

+++++++++++++

ப. திருநாவுக்கரசு




Saturday, 18 October 2025

 


போகாது… வரும்! 

எழுதப்படாத

சுய சரித்திர வரிகளுக்கு

நினைவாற்றல் அதிகம்! 


தூங்கையில்

எழுப்பி கதைசொல்லும்

சாமக்கோழி அது! 


தப்பான விடைக்காக

5ஏ டீச்சர் 

முருகனைக்

குட்ட சொன்னதில்

விழுந்த தலைமேடு 

படுகிறது தொடுகையில்! 


சேர்ந்துவந்த சேகர்

குச்சி ஐஸ் வாங்கி

தனியாகப் போய் உறிஞ்சியது 

இன்னும் கரையாமல் 

நிற்கிறது! 


டீச்சர்கொடுத்த சுதந்திரநாள்

'பெப்பர்மன்ட்'மிட்டாய்கள்

அம்மா பார்க்கும் முன்

தடுக்கிச் சிதறி

கிடக்கின்றன இன்னும்

எறும்பு ஏறாமல்! 


பட்டாசுக்கு பணமில்லாமல்

பக்கத்து வீட்டுப் பிள்ளை

மத்தாப்புகளையே

பார்த்துக்கச் சொன்ன

அப்பாவின் ஒளிமங்கிய

சிரிப்பு மறையவில்லை! 


ஒரு நள்ளிரவு

சாக்குருவி ஓசைக்கு

விழித்த காதுகளில்

அம்மாவிடம் அப்பாமுனகிய

“எது கேட்டும் வாங்கித்

தரமுடியவில்லையே”

கேட்டது ! 


கோழி கூவிவிட்டது

பள்ளிக்கூடம் போக

கட்டணமில்லா 

கட்டை வண்டி கிடைத்தது! 


ஃஃஃஃஃஃஃஃஃஃ

ப. திருநாவுக்கரசு



Sunday, 12 October 2025

விடைபெறும் முன்




ஆளாமல் ஆண்ட
குடும்பத்தின் அரசன்
கிழவனானான்!

அவன் முனகல்களில்
எரிமலை ஒன்றின்
இரைச்சல் இருந்தது!

வடிந்து வடிந்து
பெருநதி காட்டிய மணலோ பலரால்
கொள்ளை போனது!

மன்னன் ஆண்ட
பெருநிலம் எல்லாம்
பிள்ளைகள் கல்விக்கு
நன்கொடையானது!

மணிமகுடக் கற்கள்
மகள்களின்
இல்லறம் ஜோடிக்க
கழன்று போயின!

மகுடம் மட்டும்
தனி விலையாகி
மகாராணிக்கு
மருத்துவம் செய்தது!

கையின் கடகங்கள்
உடன்பிறந்தாள்களின்
கண்ணீர் துடைத்த
கைக்குட்டைகளாயின!

சிம்மாசனத்தின்
பின்னங்கால்கள்
உறவுவேடங்களின்
கடன்தீர்த்து முடிந்தன!

முன்னங் கால்களும்
ஊர்த் திருவிழாவுக்கு
தேர்ச்செலவாகி
கொடை புண்ணியம்
பெற்றது!

கண் போல் காத்துவந்த
கல்விச் சுவடிகள்
வெந்நீர் அடுப்பிற்கு
விறகாய் எரிந்தன!

மிச்சமிருந்தவை
கல்யாணவேட்டியும்
காதலி மோதிரமும்.

பழைய பட்டு
நல்ல விலைக்கு போனதும்
கழற்றாமல் கிடந்த
கைவிரல்மோதிரமும்
கடைசி சிலவுக்கு
காத்திருக்கின்றன!

கட்டியவேட்டிமட்டும்
காடுவரை. ….!

×××××××××
ப. திருநாவுக்கரசு

Wednesday, 8 October 2025

ஊமை வலி

 


எங்காவது

கொண்டு விட்டுவிடலாம்

என முடிவானது.


அன்று

எல்லாருமாக

நான் சம்மதிக்கும்படி

அந்த முடிவைச் 

சொன்னார்கள்.

எனக்கு தெரியாத

சுமைஅவர்களின்

பெரும்கனமானது

புரியாமல்

எதையும் கேட்காமல்

தலையசைத்தேன்!


இந்த நிமிடம்வரை

அதன் 'மியாவ்கள்'

அப்பா பசிக்கிறது 

என்றுதான்

எனக்குக் கேட்டிருக்கிறது.


நாளை 

திசைதெரியாத இடத்தில் 

விட்டு விட்டபின்னும்

அந்த'மியாவ்கள்'

யாருக்கும் புரியும்?


அது யாரைத்தேடிச்

சொல்லியிருக்கும்

அதன் பசியை?

*****

ப. திருநாவுக்கரசு


Saturday, 4 October 2025

அருளே வழி


 

தயவின் வழி
🔥🔥🔥🔥🔥

அருளே குழந்தையாகி

அருளே உலகுலாவி

அருளால் பசியை ஆற்றி

அருளின் உண்மை பாடி

அறிவெனும் சபையைக் கூட்டி

அருட்சுடர் ஒளியை ஏற்றி

அருள் நிறை வாழ்வைக் கூறும்

அருள் நிறை மாந்தர் என்றும்

அகிலத்தில் மரித்தாரில்லை!

அகத்தினில் அருள்மிக்காரால்

அனைத்துயிர் துயர்கள் நீங்கும்

அடுத்தவர் நலம் நினைவே அருளெனும் சொல்லின் மகிமை!

அனைவரும் சமமென ஒளிரும் அருட்பெரும் ஜோதி ஒன்றே! 

அருட்பிரகாசர் வழியே நிற்றல் அன்றாடம் நமக்குப் பாடம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏
ப. திருநாவுக்கரசு


Thursday, 2 October 2025

மகாத்மா


 பூவுலகத் தந்தை

 🙏🙏🙏


கள்ளமில்லை

கபடமில்லை

அதனால்

உள்ளம் மரிக்கவில்லை! 


உணவை விட்டு

உடையைச் சுருக்கி

நடையைப் பெருக்கி

படைமுகம் வென்றார்! 


உடல் துளை ரவைகள்

உள்ளத்தைத் 

தொட்டுத் தான்

வெட்கிச்சிவந்து

வெளிவரத் தயங்கின! 


வெள்ளாடை பெற்றது

உத்தமன் ரத்தம்-அது

மெய்யெழுதிய மை! 


உயிரைப் பரிசளித்து

ஒரு பூவின் சிரிப்பை

வெல்ல வந்த

பூவுலகில் தந்தை! 


காலம் கடந்தும்

மரணத்தை

வெல்லும்

வெள்ளந்திச்

சிரிப்'பூ'க்கள்! 

----------

ப. திருநாவுக்கரசு

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...