Tuesday, 12 May 2026


 

முடிந்தவரை வரை

 

வரைந்து வரைந்து

வந்திருக்கிறேன்.


வானமும் வில்லும் வயல்பசுமையும்

தோகைமயில் பாடும்குயில்

பாலன்னம் பருவமான்

காரெருமை கவின்மலர்கள்

எல்லாவற்றின் நிறங்களும்

என் வண்ண ஏனக்குழிகளில்.


வரைபொருள் தேடினேன்

எதிர்நின்றது தாய்.

அன்பெனும் நிறத்தில்

பாலின் வண்ணம் சேர்த்தேன்.


தந்தைக்கென்று

செவ்வண்ண உழைப்பும்  

சேராத சேமிப்பு பாசிநிறமும்

கவலைச் சேற்றின் நிறமும்.


உறவுகளை ஒன்றாக்கித்தீட்ட

உரியநிறமின்றித் திண்டாடிவிட்டு

கரிக்கோட்டால் கீறிமுடித்தேன்.


நயமிகு நண்பனை

நிறமற்ற வெறும்நீரால் 

எழுதிவைத்தேன்!


ஆசானை முகம்காண

அறிவுநூல் செம்மையும்

ஆகாய நீலமும்

காலம் வெளுக்காத

கருத்துமையும்

கலந்து வரைந்தேன்.


என்னை எழுதிப்பார்க்க

உங்களிடம் நீட்டுகிறேன்

தூரிகைக்கு கைகொடுங்கள்

தும்பைவண்ணத் தாளிதுதான்.

*****-

ப.திருநாவுக்கரசு

—----------------

படம்: கரந்தை ஐஜெயக்குமார்.


Wednesday, 6 May 2026


 

திசாபுத்திகள்
%%%%%%%%

இரண்டுதிங்களாக
இருந்த சூடும் சுரணையும்
வாக்குவெப்பமண்டல
மாறுதலால்
திசைமாறுகின்றன!

திராவிடகுருவின்
பகைக்காரகன்
தென்திசையில்
பலம்பெறுகிறான்!

புத்திக்காரன்
பலவீனமாகிவிட்டதால்
ஜனசமுத்திரம்
உப்பு குறைந்து
உணர்ச்சி தடுமாறும்!

சுக்கிரனால்
வாசனாதி திரவிய ஆசையும் 
ஆடை அணிகல 
முகக் கவர்ச்சியும் 
உச்சம்பெறும்!


சுயமரியாதையில் ஊறியஆடைகள்
நிழல்காய்ச்சலில் கிடக்கும்!

சூரியதிசையைவிட்டு
சனிதிசைக்கு 
கூட்டணி நிழல் கோள்கள்
இடம் பெயரும்!

மேற்கில் முடிந்தாலும்
கிழக்கில் எழுந்தாலும்
தெற்கில் பலம்பெறும்
சூரியன்!


ப.திருநாவுக்கரசு

Friday, 24 April 2026

முடிவிலும்.


 










முடிவிலும் ஒரு காயம்!


அது 

நான் என்றோ

பழம் தின்று நட்ட விதையும்

அதன் ருசியும்

அதை உயரத்தில் வைக்கச்சொன்னது.

 மேல் மாடியில்

செடிவளர் பையில்

குடிநீர் ஊற்றி காத்துவந்தேன்.

 

காலையில் இருவரும்

ஒருவர் ஒருவர்முகத்தில்

விழிப்போம்

அது ஒரு புத்துணர்வுப் பரிமறுதல்.

 

நம்பிவந்த நாற்றை

கைவிடாமல் காக்கும் கடமையில்

கண்ணும் கருத்துமாய் பார்த்தும்

நீர்விட மறந்தால் அது

உடல்மொழியால் வாட்டம் காட்டும்

மன்னிப்புடன் ஒரு குவளை ஊற்றுவேன்.

 

இடைவெளி கூடிப்போய்

ஒருநாள் பதறி ஓடிப் பார்த்தபோது

சாவதற்கு முன்னால்

ஒருமுறை பார்க்க நின்றதாக

பார்த்ததும் பதறிவிட்டேன்.

 

வெயிலின் உக்கிரத்தில் அந்த

பச்சை உதிரம் தீர்ந்து கொண்டிருந்தது.

உயிர்நீர் ஊற்றிக் காத்திருக்கிறேன்

நீ பிழைத்துவிடு

என்னுள் மீண்டும் தழைத்துவா!

 

உன்னை கவனிக்காமல் போன தவறை

சிலபொத்தல் காரணங்களால்

தைக்கப் பார்க்கிறேன்.

 

ஆம்...என் நேரம்

பத்துபேருக்கான சமையலில்

ஐந்தாறு பொது நிகழ்வுகளில்

இரண்டொரு மணநிகழ்வில்

ஒருசில பிணநிகழ்வுகளில்

விருந்துகளில்

கைபேசி பாசாங்கு பேச்சில்

போய்க்கொண்டே இருக்கிறது..

 

உன் கடைசி ஆசைக்காக

என்னைப்பார்த்துவிட்டு

கண்களை மூடும் முன்

நான்முடிந்துவிடுகிறேன்.

நம்முடன் பெரும் சுற்றம் இருக்கலாம்

ஆனாலும் ....முடிந்துபோவோம்

 

உனக்குவந்தது நீர் வறட்சி

எனக்குவந்தது காலவறட்சி

நம் அருகில்தான் தண்ணீர் தொட்டிகூட....


-ப.திருநாவுக்கரசு

 

Sunday, 15 March 2026


 

                                   பனித் துளியில் காணப்படும்

                                     கதிரவனின் வடிவம்

வானத்துக் கதிரவனைவிட

சிறியது அன்று” –கலீல் ஜிப்ரான்

 

ஒரு கவிஞன் தமிழில்  சிறந்த படைப்புகளை அளித்து அதனால் ஒர் உயர் பரிசைப் பெறும்போது தமிழர்கள் அனைவரும் மனதார மகிழ்கிறோம்; மகிழவேண்டும். படைப்பாளியும் அப்பரிசை தமிழர்களுடையதாகவே அர்ப்பணித்துக் கூறியிருப்பதை நாம் சிறிதும் கபடமில்லாமல் ஏற்பதே நல்லது.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு  இலக்கியத்திற்கான இந்தியாவின் உயர்விருது ஞானபீட விருது -அதுவும் தமிழில் கவிஞனின் படைப்பு ஆளுமைக்காக வழங்கப்படுவது தொன்மைப் பெருமையும் அழியாத இளமையும் கொண்ட தமிழ் மொழிக்கான பெருமை என்பதால் அனைவரும் மகிழ்வோம்.

தம்பள்ளிநாள்தொட்டு பற்றிக்கொண்ட தமிழ் பற்றிய வியப்பையும் தம் எழுத்து பற்றியும் அவர் “இதுவரை நான்” நூலில் எழுதியிருப்பத்தைப் படித்து அடியேன் ஈர்க்கப்பட்டவன். தொடர்ந்து வந்த கவிராஜன் கதை எனும் பாரதி பற்றிய கவிதை சரித்திரம் பாரதிவாழ்க்கை வரலற்றில் கவிரசம் ஊட்டப்பட்டது. உரைநடையில் கழுத்துவலிக்க படிக்க முடியாவிட்டாலும் இந்நூல் ஒன்றுபோதும். புதுக்கவிதையில் ஒரு மாகவிஞனைப்பற்றி காவியம் சமைத்தவர் என எழுத்தாளர் சாவியே பாராட்டினார்.

80களில் தமிழில் வெளிவந்த சாவி வார இதழை அது  தொடராக வந்தபோது ஆறுநாள்கள் ஆறாமல் தவித்து எழாம் நாளில் பாபநாசம் லக்கிஸ்டோர் பாய் கடையில் வாங்கிப் படித்த இதம் இன்னும் உள்ளது மனதில்.  அந்நூலில் புதுவையில் ஒரு கல்யாண வீட்டில் நடந்த இருபெரும் கவிகளின் முதல் சந்திப்பை இப்படி வர்ணிப்பார்:

“ஓரு கவிதாபந்தம்

பசுவையும் கன்றையும்

சந்தோஷ நெருக்கத்தில்

சந்திக்க வைத்தது.

அந்த நாள்

தமிழ்க்கன்னியின் கூந்தலில்

புதிதாக ஒரு

பூச் சேர்ந்த நாள்”

பாரதியை சுப்புரத்தினதாசன் எனும் பிற்காலத்தின் புரட்சிக்கவிஞர் சந்திப்பை அவர் சொன்னது போன்றவற்றால் அதிகம்  வியப்பாகி வகுப்பறையில்  மாணவர்களின் இலக்கிய வாசிப்பை அதிகம் ஊக்கப்படுத்தினேன்.

அவருடைய முதல் திரைப்படப் பாடல் தொகுப்பு ஒன்று தஞ்சையில் வெளியிடப்பட்டது. தஞ்சை இலக்கிய அன்பர்கள் பெருமளவில் ஏற்பாடு செய்து அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பாபநாசம் இலக்கிய அன்பர்கள் திரு இரா.மணிமுடி, திரு கண்ணன் இருவரும் தஞ்சையில் உள்ள  தொடர்பால் என்னோடிருந்த சிறு குழுவினரையும் வைத்து நிகழ்ச்சிக்கு அழைக்க வைரமுத்து பாபநாசம் வந்திருந்தார். வாகனத்தில் இருந்தபடி என்பெயரையும்  சொல்லி அனைவரையும் அழைத்தார். தஞ்சையை அன்று ஒரு முக்கிய இலக்கிய கேந்திரமாக உருவாக்கும் பலரையும் பக்கத்து ஊர்களிலும் அவ்வாறு அழைத்திருந்தனர். இன்றும் அதே நெருக்கச்சுற்றம் அவருடன் உள்ளது.

தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசலில் தொழுகைப்  பணியிலிருந்த நினைவில் வாழும் எஸ்.எம்.ரபியுத்தீன் பாகவி பெரும் தமிழ்ப்பற்றும் இலக்கிய வாசிப்பும் கொண்டவர்.6-10-99 நாளில் கையொப்பமிட்டு எனக்களித்த ஒரு நூல் பெய்யெனப் பெய்யும் மழை. அந்நூலில் எட்டையபுர அரண்மனையவிட்டு பாரதி மதுரைக்கு ஆசிரியப்பணிக்குப் போனதை,

ஒருநாள்-

 குயில்

 கூண்டு தாண்டியது..”

 

“பொதிகைத் தென்றல்

பூப்பெய்திய

மதுரைக்கு வந்து

மையமிட்டது!”

இப்படியொரு வாசிப்பில் வைரமுத்து நம் இலக்கிய உறவானார். திரைப்பாடல் அவரால் ஒரு புது பரிணாமம் பெற்றதை கவிக்கோ குறிப்பிட்டுள்ளார். பாடல்களில் படிமச் சிதறல்களும் உவமைகளும் உள்ளே இடம் பெற்றன. விசிட்டர் லென்ஸ் எனும் ஒரு வார இதழில் அன்று அவர் திரைப்படங்களை-“தீக்குச்சிகள் தின்னத்தருவோம்” என்று ஒரு உத்வேகம் காட்டியவர்தான். மாறாக பாடல்களில் பல பரிணாமங்களையும் காட்டி வென்றார். காலம்தான் மாற்றங்களின் கொல்லுப்பட்டற்றை. ஒரு சுயமரியாதை பொதுக்கூட்டத்தில் நெற்றிநீறை அழித்த கண்ணதாசன்தான் பின்னாளில் அர்த்தமுள்ள இந்துமதமும் இயேசு காவியமும் எழுதினார். அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா பாடியவர்தான் இந்தியநாடு நம்நாடு இந்தியன் என்பது என்பேரு பாடினார்.  அவர்தான் மாற்றம் என்பது மானிட தத்துவம் என்றார்.

வைரமுத்துவின் கவிநயங்களும்,கதை எழுத்தும், பேச்சும் எண்ணற்றோர் உள்ளங்களில் இடம்பெற்றவை. என்னளவில் தமிழாற்றுப்படைதான் இந்தக் காலத்தில் பொறிக்கப்படவேண்டிய கல்வெட்டு சாசனம். தமிழர் வரலாற்றில் வகைக்கொரு எழுத்துநாயகர்களை மிக கவனத்துடன் கூடிய வரலாற்றுத் தகவல்களுடன் வகுத்துக்கூறியிருக்கிறார். அது  தமிழர்கள் தம் பண்பட்டுப் பெருமை எண்ணி நெஞ்சுநிமிர்த்தவும் எதிர்காலம் நின்று நிலைக்கவும் எழுதப்பட்டுள்ளது. ஆற்றுப்படை தொல்கப்பியர் தொடங்கி அப்பர் வள்ளலார் வழியாக பெரியாரிடம் வந்து அப்துல் ரகுமனிடம் முடிகிறது. பெரியார் ஏன்? கேட்கலாம்.

“எழுத்து-சொல்-பொருள்-யாப்பு அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து  பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?”

 என்ற அவர் நியாயம் ஒன்று அதனுள் உள்ளது.

வைரமுத்து அதிகமாக விமர்சிக்கப்பட்டவர். திராவிட இயக்கச் சார்பு, திரையிசைப்பாடலில் செல்வாக்கு, செல்வப்பெருக்கம், இலகில்லாத அரிதான தமிழ் அமைப்புகள் தொடர்பு, கரிசனமில்லாத நூல்கள் விற்பனை,பாலியல் புகார் என்று அவர்படைப்பின் தரத்தை, உவமைகளின் உயரத்தை,எழுத்தின் ஏற்றத்தை விட்டுவிட்டு என்னவெல்லாமோ பேசிக்கொள்வார்கள். ஆண்டாள் பற்றிய அருந்தமிழ்க் கட்டுரையில்

 “ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வர்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் மொழியின் குழைவிலும் தமிழின் அழகிலும்,உணர்ச்சியின் நெகிழ்விலும்.பெருமாளுக்கென்றே முந்திவிரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே!”

என்று பெருமை கூட்டியவர் தன் கட்டுரையின் முடிப்பில் சொன்ன ஒரு மாற்றுப்பார்வைக்காக பாய்ந்த கூர்மை அம்புகள் அவரைச்  சோர்வடையச் செய்துவிடுமோ என்ற சூழலைத்தந்தது. அதற்காக படைப்பாளியின் அப்பழுக்கில்லாத கிராமத்துத் தாயையே பழித்து சொல்தூற்றினார் ஒருத்தர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கடிதத்தில் ஒருமுறை படித்த நினைவு. எழுத்துத் திறமை கொண்டவரின் தனிப்பழக்கத்தை வைத்து சாய்ப்பது பண்பாகாது. கண்ணகி படத்திற்கு உன்னதமான வசனம் எழுதிய இளங்கோவன் மதுப்பழக்கத்தை யாரோ ஒருத்தர்  சுட்டியபோது இடித்துக் கூறினார் கலைஞர். கலைமாமணி கவி.கா.மு.ஷரீபு அவர்களின் வசதிக் குறைவுக்காக வீடுகட்டித்தர குறிப்பிட்ட கூட்டத்தில் “எழுத்தாளன் புலமையைப் பேசுங்கள் வறுமையைப் பேசாதீர்கள்” என்று கண்டித்தார்.

வைரமுத்துவுக்கு கிடைத்திருக்கும் அத்தனை விருதுகளும் பரிசுகளும் பட்டங்களும் பாராட்டுகளும் தமிழால்!

வைரம்பாய்ந்த முத்துவை மிகச் சிறிதாக எண்ணினாலும் தமிழ்முடியில் அது அலங்கரித்துக்கொண்டே இருக்கும்  கவிப்பேரரசரே.

தமிழில் அவருக்கு அரியாசனமான அறிவாசனம்  கிடைத்துள்ளது!   

எழுதிக்கொண்டே இருங்கள்! வாழ்த்துகள்!

ப.திருநாவுக்கரசு

(அரசு இலக்கியமுற்றம் தஞ்சை)

 

Saturday, 7 March 2026



 

         நோக்க நோக்க....

இருப்பது தரும் பொலிவை

இல்லாததும் தருகிறது!


உதிக்கும் திசையும்

மறையும் திசையும்

விடியலில் இருப்பையும்

முடிவதில் இல்லாமையையும்

அழகழகாய்

ஒத்திகை செய்கின்றன!


தலைமுடியின் இருப்பழகை

பொன்மகுடம் மறைத்தபோது

கருமுடி பொன்முடியாகி

இல்லாததை இருப்பாக்குகிறது!


நுனிவாழை

பந்தி இல்லாதபோது

பழையசோறு அமுதாகி இருக்கிறது!


தேய்ந்து உருவமிழக்கும்

குடும்பப் படத்தில்

அழுத்தமாக உள்ளது

அத்தனை அன்பும்

உறவின் வடிவங்களும்!


அப்பாவின் பழைய கடிதம்

இருந்தபோதைவிட

படிக்கையில் இப்போதுதான்

இன்னமுதக் குரலாய்க் கேட்கிறது!


அம்மா இல்லைதான் 

இருசக்கர வாகனத்தின்

விசையைத் தொடுகையில்மட்டும்

பார்த்துப்போப்பா…’

என்கிறதே!

 

அன்று

இல்லாதுபோனதெல்லாம்

இருக்கும் அழகாகி

மதிப்புகூடுகிறது

இன்றும்!


தலைமுறைகள்

தாண்டிப் போவதால்

இல்லாமல் போவதில்லை

ஒன்றும்!

***********

ப.திருநாவுக்கரசு






Friday, 19 December 2025

நன்றறிவோம்..

 

நலம் தரும் சொல்-முகநூலில் படித்ததை நன்றியுடன் பகிர்கிறேன்



முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது.

"இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... 

நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். 


நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . 

இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .

நான் இறந்து விட்டால்... 

என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.

எனவே 

எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். 

அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.


வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் 

மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.


என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்... 

தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்." 

இப்படிக்கு மீனாள் ராமசாமி. 

என்று எழுதி இருந்தது.


சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர். 

தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 


'யார் இந்த மீனாள் ராமசாமி? ' 

என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது. 

'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார். 

ஆனால், வேலைப் பளு காரணமாக

முடியவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை... 

'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். 


அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

சின்ன கட்டிடம்... 

வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது. 

பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது. 


எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். 


"நீங்கள் தானே மீனாள் ராமசாமி?” 

என்று கேட்டார். 

“ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார்.

விவரங்களைச் சொன்னார்.

“அப்படியா தம்பி 

ரொம்ப சந்தோஷம்... 

உட்காருங்க. 

ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” 

என்று இருக்கையைக் காண்பித்தார்.


“ஒன்றும் வேண்டாம் 

தண்ணீர் மட்டும் கொடுங்கள்”

தண்ணீர் கொடுத்தபடியே, 

“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்...

ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .

பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். 


எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.

கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள். 

நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம். 


எங்களுக்கு குழந்தைகள் இல்லை...


எனவே, அதிகம் செலவுகள் இல்லை. 

அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.

வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்... 

அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார். 

எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” 

என்று விபரமாகச் சொல்லி

 முடித்தார்.


இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.

“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.


“சரிங்க ஐயா,

உங்களைப் பார்க்க வந்தேன். 

வேறு விஷயம் இல்லை...

கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர்.

சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .

அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும்

“நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் "

என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.


ஆச்சரியம் என்னவென்றால், அங்கு 

கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை. 

வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்

கொண்டார்கள். 

பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை. 

இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.


“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே? 

யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “

என்று கேட்டார் மானேஜர்.

“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. 

காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”

“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்” 

என்று சொன்னார். 


மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார். 

மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார். 

மாதங்கள் போனது.


கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை. 

'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை.

காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.

மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். 


எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். 


அதே கல்லாப்பெட்டி . 

எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள். 

சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்... 

மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.


உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள். 

மேனேஜருக்கு புரிந்து விட்டது.

விசாரித்ததில்... 

அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். 

அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம். 

இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.


“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

“தெரியும் “என்று சொன்னார்.

“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார். 


“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது. 

எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.

அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். 

அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். 


அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும்.

என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 

இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.


“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” 

என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள்.

இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது...


*இந்த உலகம் எப்படி பட்டது * என்று... 

எதையும் பெறுவதை விட... 

*கொடுப்பதில் தான்... * 

*ஆனந்தம்,*

*அமைதி,*

*திருப்தி* 

*நிம்மதி* உள்ளது. 

இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான்.

-------------------------------

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

(அறன் வலியுறுத்தல் குறள் எண்:36)


பொழிப்பு (மு வரதராசன்): 

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

Friday, 28 November 2025

வினாவும் கேள்வியும்


தோழமையின் வினா.. 

என் நினைவே
உனக்கில்லையா? 
என்ற 
கேள்விக்களைகள்
கண்டபடி முளைக்கின்றன. 

விதைபோடாமல்
வீரியமாக முளைத்து விடுகின்றன. 

கால்நூற்றாண்டாக
வறண்ட பாசத்தின்
வம்பிழுக்க வந்த
 கேள்வி அது! 

நினைப்பிரும்பில்
துருப்பிடிக்கவைத்த
ஈரத்தின் புதிர்க் கேள்வி அது! 

சூட்டுச்சட்டியில்
தெளித்த நீர்த்துளி
மீளப்பிறக்கும் ஆசைப்பிதற்றல் அது! 

நாள்பட ஊறிய
கள்ளின் மயக்கம் அது! 

தொலைவில் சென்ற தொடர்வண்டி
கடைசிப்பெட்டியின்
முதுகு அது! 


உறவும் பழக்கமும்
உண்மை வேடமிட்டால்
பகையின் அந்தரங்கம்
பவிசுகாட்டிவரும். 

பசையற்ற
அஞ்சல்தலை
காதல்கடிதம்
கொண்டு செல்லுவது கனவு தான். 

கேள்வியே காலம்
கடந்தபின்
பதிலும் காலமாகிவிடாதா
என்ன? 

என் நினைவு 
உன்னிடத்தில்
இத்தனைகாலம்
கேள்வியாக இருந்தபின்
நான் மறக்க
தடை ஏது? 

-ப.திருநாவுக்கரசு


  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...