Saturday, 7 March 2026



 

         நோக்க நோக்க....

இருப்பது தரும் பொலிவை

இல்லாததும் தருகிறது!


உதிக்கும் திசையும்

மறையும் திசையும்

விடியலில் இருப்பையும்

முடிவதில் இல்லாமையையும்

அழகழகாய்

ஒத்திகை செய்கின்றன!


தலைமுடியின் இருப்பழகை

பொன்மகுடம் மறைத்தபோது

கருமுடி பொன்முடியாகி

இல்லாததை இருப்பாக்குகிறது!


நுனிவாழை

பந்தி இல்லாதபோது

பழையசோறு அமுதாகி இருக்கிறது!


தேய்ந்து உருவமிழக்கும்

குடும்பப் படத்தில்

அழுத்தமாக உள்ளது

அத்தனை அன்பும்

உறவின் வடிவங்களும்!


அப்பாவின் பழைய கடிதம்

இருந்தபோதைவிட

படிக்கையில் இப்போதுதான்

இன்னமுதக் குரலாய்க் கேட்கிறது!


அம்மா இல்லைதான் 

இருசக்கர வாகனத்தின்

விசையைத் தொடுகையில்மட்டும்

பார்த்துப்போப்பா…’

என்கிறதே!

 

அன்று

இல்லாதுபோனதெல்லாம்

இருக்கும் அழகாகி

மதிப்புகூடுகிறது

இன்றும்!


தலைமுறைகள்

தாண்டிப் போவதால்

இல்லாமல் போவதில்லை

ஒன்றும்!

***********

ப.திருநாவுக்கரசு






10 comments:

  1. கசங்கிய பணத்தாளுக்கும் கசங்காத புத்தம் புது பணத்தாளுக்கும் மதிப்பு என்பது ஒன்றேதான்...

    நாணயங்களில் பூவும் தலையும் இருந்தாலும்
    வேற்று நாட்டில் என்னவோ அவை செல்லாக் காசுதான்...

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்

    உயிர்களைக் குறி வைக்கும் மத்திய கிழக்குப் போர்

    வேறுபாடுகள்
    எல்லாவற்றிலும்...

    வாழப் பழகிக்கொண்ட
    மக்கள் ஒரு பக்கம்..
    வயிற்றுப்பாட்டிற்கு அல்லாடும் மக்கள் ஒருபக்கம்...

    இருப்புப்பாதையாய் பயணிக்கிறது உலகம்..
    பயணங்கள் முடிவதில்லை...!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அன்பு அர்சுனன்

      Delete
  2. நினைத்து நினைத்து ஏங்கவைக்கும் நினைவுகள் .
    "தேய்ந்து உருவம் இழக்கும்
    குடும்பப்படத்தில்
    அழுத்தமாக உள்ளது
    அத்தணை அன்பும்
    உருவ வடிவங்களும்
    மனதை தொட்ட வரிகள்.பழைய நிழல் படங்களை பார்க்கும்போது ஏற்படும் மனவலிகள்
    அருமையான கவிதை

    ReplyDelete
  3. காட்சியில் இல்லையென்றாலும் கருத்தில் நிறைந்திருக்கும்.அதனால் நிச்சயமாக 'இல்லாமல் போவதில்லை ஒன்றும்' என்பது சத்தியமான வரிகள் ஐயா.

    ReplyDelete
  4. ஆகா! அற்புதமான கவிதை! எல்லாத் தமிழர்களின் மனத்தைப் படம் பிடித்துக்காட்டும் கவிதை!
    வாகனத்தின் விசையைத் தொடும்போது பார்த்துப்
    போப்பா! அம்மாவின்குரல்!
    அப்பாவின் குரலும் சேர்ந்து
    கேட்கின்றது இப்போதும்!
    மாந்தர் எண்ணவோட்டம்
    பாசத்தின் நிழலில் தான்
    இப்போதும் இளைப்பாறுகின்றது!
    நல்ல, மனம் தொட்ட கவிதை தந்த நண்பரே! வாழ்க பல்லாண்டு! அன்பின் இனியன்
    ச.செந்திலாண்டவன் சென்னை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க டாக்டர் செந்தில்

      Delete
  5. நன்றி நண்பரே! உங்களை என்றைக்கு நேரில் கண்டு மகிழ்வேனோ? வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...